சென்னையில் பரபரப்பு: தலைமைச் செயலகம் அருகே பயங்கர வாயுக்கசிவா? சூழ்ந்த திடீர் புகை மூட்டத்தால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் எனப் பொதுமக்கள் அவதி!
சென்னை தலைமைச் செயலகப் பகுதியைச் சுற்றித் திடீரெனப் பயங்கர புகை மூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துறைமுகப் பகுதியிலிருந்து புகையுடன் கலந்து வந்த வாயுவால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் காவல்துறையினர் கண் எரிச்சல் மற்றும் சுவாசச் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தின் மிக முக்கிய நிர்வாக மையமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை ஒரு அசாதாரணமான சூழல் நிலவியது. எதிர்பாராத விதமாகத் தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைப் அடர்ந்த கரும்புகை போன்ற மூட்டம் சூழ்ந்ததால், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வாயுக்கசிவு அச்சம் ஏற்பட்டுள்ளது.
.
தலைமைச் செயலகத்தைச் சுற்றித் திடீர் புகை மூட்டம்: சென்னை மெரினா கடற்கரைச் சாலை மற்றும் தலைமைச் செயலகப் பகுதியைச் சுற்றி இன்று திடீரென அடர்ந்த புகை மூட்டம் உருவானது. இந்த திடீர் புகை மண்டலம் காரணமாக அந்தப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள் கூடச் சரிவரத் தெரியாத அளவிற்குப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பயணித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கண் எரிச்சல், சுவாசச் சிரமத்தால் மக்கள் அவதி: இந்த புகை மூட்டம் வெறும் சாதாரணப் புகையாக இல்லாமல், ஒருவிதமான வேதிப்பொருள் கலந்த நெடியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. துறைமுகப் (Chennai Port) பகுதியில் இருந்து புகையுடன் கலந்து வந்த இந்த விசித்திரமான வாயுவின் காரணமாக, அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களுக்குக் கடுமையான கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் பெரும் சிரமம் (மூச்சுத் திணறல்) போன்ற உடல்நல உபாதைகள் ஏற்பட்டன. இதனால் அங்குப் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மாஸ்க் அணிந்தும், மூக்கை மூடிக்கொண்டும் அச்சத்துடன் நடமாட்டம்: நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அங்குப் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது முகங்களை உடைகள் மற்றும் கைகள் கொண்டு மூடியபடி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்தனர். குறிப்பாகத் தலைமைச் செயலகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தங்களது மூக்கை கவால்துறை கைக்குட்டைகளால் மூடிக்கொண்டும், அவசரமாக மாஸ்க் (Mask) அணிந்துகொண்டும் மிகுந்த அச்சத்துடன் தங்களது கடமைகளை ஆற்றினர்.
துறைமுகப் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு கிடங்கில் ஏற்பட்ட இரசாயனப் பொருள் கசிவு அல்லது கழிவுகள் எரிக்கப்பட்டதால் இந்த விசித்திரமான புகை மூட்டம் உருவானதா என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், தீயணைப்புத் துறையினரும் தற்பொழுது தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.