மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை..! சென்னையில் டீசல் லிட்டர் ரூ.100-ஐ தாண்டியது!
சென்னையில் இன்று (ஜூலை 13) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69 மற்றும் டீசல் ரூ.1.71 உயர்ந்துள்ளது. இதனால் டீசல் விலை மீண்டும் லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி ரூ.101.26 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்று (ஜூலை 13) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டீசல் விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியிருப்பது பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, உலகளாவிய அரசியல் சூழல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் சற்று குறைந்ததையடுத்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்தன. குறிப்பாக, ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த அறிவிப்பு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்தது.
ஆனால், சமீபத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்தியாவிலும் எரிபொருள் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது.
இன்றைய (ஜூலை 13) விலை நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்ந்து ரூ.109.45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.71 உயர்ந்து ரூ.101.26 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்துள்ளதால், சரக்கு வாகன உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தினசரி போக்குவரத்தை நம்பியுள்ள பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்கள், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை நிலவரத்தைப் பொறுத்தே அமையும். மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் சர்வதேச எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, வரும் நாட்களிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.