சிவகங்கை மாணவர் கத்திக்குத்து சம்பவம்: “அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்வி” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சிவகங்கை ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்விக்கான சான்று என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர், வகுப்பறையிலேயே சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில், அரசுப் பள்ளிகளில் ஆயுதக் கலாச்சாரம் பரவுவது மிகுந்த கவலைக்குரியது என்றும், சிவகங்கை சம்பவத்துடன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளி மாணவர் மண்வெட்டியால் தாக்கப்பட்ட மற்றொரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.
அறநெறிகளை கற்பிக்க வேண்டிய பள்ளிகளில் மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும், குறிப்பாக அரசின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
மேலும், தனியார் பள்ளிகளின் நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், விளிம்புநிலை மக்களின் நம்பிக்கையாக உள்ள அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பு மற்றும் மாணவர் நலனிலும் அமைச்சர் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசுப் பள்ளிகளில் Conflict Management, Adaptability போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மாணவர்களுக்கு கட்டாயமாக நடத்த வேண்டும் என்றும், மாணவர்களிடையே ஏற்படும் கோபம், மோதல் மற்றும் மனஅழுத்தங்களை சரியாக கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.