வேலூரில் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வைரலான வேல்முருகன் யார்? சொத்து மதிப்பு மற்றும் அரசியல் பின்னணி!
வேலூரில் நடைபெற்ற திமுக எம்பி கதிர் ஆனந்தின் மகள் நிச்சயதார்த்த விழாவில் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் நடனமாடிய வேல்முருகன் குறித்த வீடியோ வைரலாகியுள்ளது. அவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் என்பதும், அவரது சொத்து விவரங்களும் வெளியாகியுள்ளன.
வேலூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிச்சயதார்த்த விழாவில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து நடனமாடிய ஒருவர் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் யார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்த நிலையில், அவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன் என்பது தெரியவந்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் - சங்கீதா தம்பதியின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடியைச் சேர்ந்த ரவி கண்ணன் - தீபா தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும் கடந்த ஜூலை 12-ம் தேதி வேலூர் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
இந்த விழாவில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது கதிர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் நடனமாடிய வீடியோக்கள் வெளியாகின. அதில், கழுத்தில் ஏராளமான தங்கச் சங்கிலிகள் மற்றும் கைகளில் பெரிய அளவிலான பிரேஸ்லெட்களுடன் நடனமாடிய வேல்முருகனின் வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டது.
வள்ளிமலை வேல்முருகன், வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார். திமுகவைச் சேர்ந்த இவர், கடந்த 2021 உள்ளாட்சித் தேர்தலில் காட்பாடி ஒன்றியத்தின் 5-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு பின்னர் ஒன்றியக்குழுத் தலைவரானார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கதிர் ஆனந்துக்காகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் துரைமுருகனுக்காகவும் தீவிரமாக தேர்தல் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
வேல்முருகனின் தந்தை பெயர் வேணுகோபால் என்றும், மனைவி பெயர் மலர்க்கொடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். 2021 உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுவில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களின்படி, இவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மொத்தமாக ரூ.22 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வேல்முருகனின் பெயரில் அசையும் சொத்துகள் சுமார் ரூ.10.79 கோடி என்றும், அசையா சொத்துகள் சுமார் ரூ.3.27 கோடி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது மனைவி மலர்க்கொடியின் பெயரில் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகள் அணிந்த தோற்றத்தால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ள வேல்முருகன், தற்போது வேலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.