கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்தில் திருப்பம்... ஜெ.பி. நட்டாவுடன் பேச்சுவார்த்தை; 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைப்பு!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என போராடிவரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை கைவிட 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு தேசிய தகுதித் தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா போராட்ட பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 20 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அங்கிருந்தபடியே தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டது. இதையடுத்து டெல்லி காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, பல்வேறு பகுதிகளை மூடியது.
எனினும், போராட்டக்காரர்கள் திட்டமிட்டபடி பேரணியை முன்னெடுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேரணியை கட்டுப்படுத்த டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளிக்கும் வகையில் சில போராட்டக்காரர்களும் காவல்துறையினருடன் மோதியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டம் தீவிரமடைந்த சூழலில், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பில் ஜெ.பி. நட்டா, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலையை மீட்டெடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலளித்த போராட்ட பிரதிநிதிகள், தங்களது போராட்டத்தை கைவிட மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை:
- நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.
- போராட்டங்கள் மற்றும் தேர்வு குளறுபடிகளால் உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
- சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக போராட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பதிவில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, போராட்டக்காரர்களிடமிருந்தே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்மொழிவு வந்ததாகவும், காலை 11.50 மணி முதல் அமைதியான சூழலில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாலை 4 மணியளவில் போராட்ட பிரதிநிதிகள் எழுத்துப்பூர்வமான மனுவை சமர்ப்பித்ததாகவும், அனைவரும் போராட்டத்தை முடித்துக்கொண்டு இயல்பு நிலையை மீட்டெடுக்க நிர்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அடுத்தகட்ட முடிவுகளை எடுக்குமா என்பது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.