தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ச. ஜோசப் விஜய் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.
சட்ட திருத்த மசோதா தொடர்பான விவகாரம்
கடந்த ஏப்ரல் மாதம், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பான அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மேலும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவும் விவாதத்திற்கு வந்தது.தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
543 எண்ணிக்கையே தொடர வேண்டும்
தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவையே நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான இடப்பகிர்வும் தற்போதைய விகிதத்திலேயே நீடிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபை தீர்மானம் வலியுறுத்துகிறது.மேலும், தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இடையேயுள்ள சுமார் 2.2:1 என்ற விகிதத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2029 மக்களவைத் தேர்தல் குறித்த கோரிக்கை
பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029 மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டசபை வலியுறுத்தியுள்ளது.
அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நடைபெற்ற எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும், தமிழகத்திற்கான தற்போதைய 39 மக்களவைத் தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் தற்போதைய பிரதிநிதித்துவ முறையைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய நிலைப்பாடாக உள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.