11-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வசதிகளுடன் சைக்கிள் – தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பயிலும் சுமார் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பில் நவீன பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வசதியுடன் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ள நிலையில், கொள்முதல் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன. 2026-27 கல்வியாண்டில் சுமார் 5.32 லட்சம் மாணவர்களுக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய மிதிவண்டிகள் வழக்கமான மிதிவண்டிகளைப் போல மட்டுமல்லாமல், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வசதியுடனும் வழங்கப்பட உள்ளன. இதற்காக தமிழக அரசு சுமார் ரூ.277 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் அன்றாட பள்ளிப் பயணத்தையும் கருத்தில் கொண்டு இந்த வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தம் 5,32,388 மிதிவண்டிகள்
தற்போதைய கொள்முதல் விவரங்களின்படி, மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள் வாங்கப்பட உள்ளன. இதில் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதிவண்டிகளுடன் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டிலும் சேர்த்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.
கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட பின்னர் 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டு நிறைவடைவதற்குள் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இணையவழி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது
மிதிவண்டிகளை கொள்முதல் செய்வதற்கான இணையவழி ஒப்பந்த நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. ஒப்பந்தத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் செப்டம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மாதிரி மிதிவண்டிகள் சென்னையில் உள்ள எழிலகத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகள் செப்டம்பர் 29-ம் தேதி திறக்கப்பட உள்ளன.
மாணவர்களுக்கு பாதுகாப்பான பள்ளிப் பயணம்
மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், சாலைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தலைக்கவசம் வழங்கப்படுவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொலைதூர பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இந்த மிதிவண்டிகள் பயனுள்ளதாக இருக்கும்.தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது நவீன பிராண்டட் மிதிவண்டி, ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வசதி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன

0 Comments
No comments yet. Be the first to comment.