ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? - டிடிவி தினகரன் கேள்வி!
சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்று பேசியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு திட்டமிடுகிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
எம்.எல்.ஏ கருப்பையாவின் பேச்சுக்கு கண்டனம்:
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் விவசாய வாழ்வியலோடு இரண்டறக் கலந்த வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, "ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன" என்று பேசியுள்ளார், தமிழர்களின் அடையாளத்தைக் கொச்சைப்படுத்தும் இந்த பேச்சுக்கு டிடிவி தினகரன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
முன்கூட்டியே திட்டமிட்ட செயலா?
சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள மக்கள் வரிப் பணத்தில் இருந்து கார் வழங்கலாம் என தவெக அரசு அண்மையில் முடிவெடுத்தது. அதனை அவையில் முன்மொழிவதற்கு இதே சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் அக்கட்சி பயன்படுத்தியது.
அதேபோல, தற்போது இத்தகைய இழிவான பேச்சை சட்டமன்றத்தில் பதிய வைத்திருப்பதன் மூலம், "வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா?" என்ற பலத்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்
அலங்காநல்லூர் முதல் சென்னை மெரினா வரை ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய உரிமை இது. இந்த உரிமையைச் சிதைக்கும் வகையிலான பேச்சு, இன்னும் அவைப்பக்கத்தில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனின் இறுதி வலியுறுத்தல்:
"ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரின் இந்த இழிவான பேச்சுதான் தவெக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா?" என்பதை அந்த கட்சியின் தலைமை பொதுவெளியில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் .
வீர விளையாட்டையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்திய தவெக எம்.எல்.ஏ தனது பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்து, அதனைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், சட்டப்பேரவைத் தலைவர் உடனடியாக இப்பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார் .

0 Comments
No comments yet. Be the first to comment.