திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் செல்போன் வைப்பதற்கு 5 மையங்கள் – பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது. இதற்காக 4 பிரதான கோபுரங்கள் உள்ளிட்ட 5 இடங்களில் கைபேசி வைப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்நிலையில், கோவிலில் பக்தர்களின் தரிசனத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.
5 இடங்களில் செல்போன் வைப்பு மையம்
செல்போன் தடையால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில், கோவிலின் 4 பிரதான கோபுரங்களின் அருகிலும், மேலும் ஒரு இடத்திலும் என மொத்தம் 5 இடங்களில் கைபேசி வைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு தங்களது செல்போன்களை இந்த மையங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்து, தரிசனம் முடிந்த பின்னர் அவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இந்த மையங்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
பக்தர்களின் வசதிக்காக புதிய நடவடிக்கைகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைத்து விரைவாக தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தரிசன நடைமுறைகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
செல்போன் பயன்பாட்டுக்கு தடை அமலுக்கு வரும் நிலையில், பக்தர்கள் கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, தரிசனத்திற்கு வரும்போது செல்போன்களை வைப்பு மையங்களில் ஒப்படைத்து ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.