"முத்துராமலிங்கம் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு" - மனம் திறந்த நடிகர் கௌதம் கார்த்திக்!
நடிகர் கௌதம் கார்த்திக் தனது திரைப் பயணத்தில் 'முத்துராமலிங்கம்' படத்தில் நடித்தது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், போதிய புரிதல் இல்லாததால் அந்த முடிவை எடுத்ததாகவும் சமீபத்திய பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். பல வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணத்தில் தான் செய்த தவறுகள் குறித்தும், தோல்வி அடைந்த படங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். குறிப்பாக 2017-ம் ஆண்டு வெளியான 'முத்துராமலிங்கம்' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, "முத்துராமலிங்கம் கதைக்காக நான் வருத்தப்படுகிறேன். என் பயணத்தின் மிகப்பெரிய தவறு அது. அறிவின்மையாலும் புரிதலற்ற தன்மையாலும் இப்படம் என் வாழ்க்கையிலும் தொழிலிலும் பெரிய தோல்வியாக அமைந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்கம் படத்தின் தோல்விக்குப்பிறகு இது போன்ற கிராமத்து பாணி மற்றும் 'மாஸ்' கதைகளைத் தவிர்த்து வந்ததாகக் குறிப்பிட்ட கௌதம் கார்த்திக், மீண்டும் ஒரு முயற்சியாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் 'தேவராட்டம்' படத்தில் நடித்தார். அந்தப் படம் குறிப்பிட்ட பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், இப்போதும் 'மாஸ்' படங்களில் நடிப்பதில் தனக்கு ஒருவித பயம் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது கௌதம் கார்த்திக் தனது கதைத் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 'மிஸ்டர் எக்ஸ்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் வேளையில், தனது பழைய தவறுகளைத் தைரியமாக ஒப்புக்கொண்ட கௌதம் கார்த்திக்கின் இந்த நேர்மையான பேச்சு அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.