"OTP-யை யாரிடமும் பகிர வேண்டாம்" - கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய எச்சரிக்கை!
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான OTP எண்ணை தொலைபேசியிலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர வேண்டாம் எனவும், சிலிண்டர் விநியோகம் செய்யும் போது மட்டுமே அதனைக் கூற வேண்டும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளன.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பான மோசடிகளைத் தவிர்க்கும் விதமாக, வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளன. சிலிண்டர் முன்பதிவின் போது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் OTP-யை யாரிடமும் முன்கூட்டியே பகிரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் இண்டேன் (Indane), ஹெச்பி (HP), மற்றும் பாரத் கேஸ் (Bharat Gas) ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கையைத் திட்டவட்டமாக வழங்கியுள்ளன. தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு முன்பதிவு குறித்த OTP-யைக் கேட்டால் எக்காரணம் கொண்டும் கொடுக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டரை உங்கள் வீட்டிற்கு நேரில் கொண்டு வந்து விநியோகம் செய்யும் (Delivery) நபர்களிடம் மட்டுமே அதற்கான OTP எண்ணைப் பகிர வேண்டும். இதன் மூலம் சிலிண்டர் சரியான நபர்களுக்குச் சென்றடைவது உறுதி செய்யப்படுவதோடு, முறைகேடுகள் மற்றும் இணையவழி மோசடிகளும் தடுக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.