பத்திரிக்கையாளர் விஜயனுக்கு என்ன நடந்தது? நள்ளிரவு விசாரணை சர்ச்சை குறித்து புதிய தலைமுறை விளக்கம்!
பத்திரிக்கையாளர் விஜயன் மீது நடைபெற்ற காவல்துறை விசாரணை, நள்ளிரவு மீண்டும் அழைப்பு, செல்போன் பறிமுதல் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை குறித்து புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
பத்திரிக்கையாளர் விஜயன் தொடர்பாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் காவல்துறை விசாரணை விவகாரம் குறித்து புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் ஒரு தனிநபரைச் சுற்றிய சர்ச்சையாக மட்டும் இல்லாமல், பத்திரிகை சுதந்திரம், தகவல் சேகரிக்கும் உரிமை மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமஸ் எழுதிய கட்டுரையின் படி, புதிய தலைமுறையில் முக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் விஜயன், அரசியல் சார்பின்றி விவாதங்களை நடத்தி வந்தவர். தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி பங்கேற்று வந்த அரசியல் விமர்சகர் திருநாவுக்கரசுடன் அவருக்கு தொழில்நிமித்த தொடர்பு மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு விவாத தலைப்புகள், கருத்துக் கணிப்புகள் மற்றும் அரசியல் தகவல்களை திருநாவுக்கரசு அவ்வப்போது வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒருநாள் "தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெறுகிறது" என்ற தகவலை திருநாவுக்கரசு விஜயனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதற்கு "அப்படியா?" என்ற வகையில் பதிலளித்த விஜயன், பின்னர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி திட்டமிடும் கூட்டத்தில் அந்த தகவலை மற்ற குழுவினருடனும் பகிர்ந்து கொண்டதாக சமஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது யாரும் அதனை முக்கிய தகவலாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசியல் வட்டாரங்களில் இதுபோன்ற பேச்சுகள் ஏற்கனவே பரவலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக சாட்சியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை விஜயனுக்கு சம்மன் வழங்கியது. இதை உடனடியாக தனது நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற விஜயன், அலுவலகத்தின் முழு ஒத்துழைப்புடன் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சியையே ரத்து செய்து, வழக்கறிஞர் மற்றும் சக ஊழியர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது திருநாவுக்கரசுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களை முழுமையாக காவல்துறையிடம் விளக்கியதோடு, செல்போனிலிருந்த செய்திகளையும் காட்டியதாக கூறப்படுகிறது. இரவு சுமார் 12 மணி வரை நீடித்த விசாரணையின் முடிவில், அவரிடம் மேலதிக தகவல்கள் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்த விசாரணை அதிகாரி, வீட்டிற்கு செல்லலாம் என்று அனுமதி வழங்கியதாக சமஸ் எழுதியுள்ளார்.
ஆனால் அதன்பிறகே பிரச்சினை தொடங்கியதாக அவர் குற்றம்சாட்டுகிறார். வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த விஜயனை மீண்டும் நள்ளிரவில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும், அதே கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மறுநாள் காலை மீண்டும் வருமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் காலை 11 மணிக்கே காவல் நிலையம் சென்ற விஜயன், மாலை 7 மணி வரை விசாரணை என்ற பெயரில் அங்கு உட்காரவைக்கப்பட்டதாகவும், இந்த தகவல் வெளியான பின்னர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சமஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரே விஜயன் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பின்னர் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்தான் மிகப்பெரிய சர்ச்சை உருவானதாக சமஸ் தெரிவித்துள்ளார். அதில், "ஆட்சேபகரமான வகையில் குறுந்தகவல் அனுப்பி, குற்றச்சதியின்போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த வரி, எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத நிலையில் ஒரு பத்திரிகையாளரின் நற்பெயரையும் தனிப்பட்ட கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அரசியல் தலைவர்கள் பலரும் ஆட்சி கவிழும் என்ற கருத்துகளை பொதுவெளியில் தொடர்ந்து பேசியிருந்த சூழலில், அத்தகைய தகவல் குறித்து வாட்ஸ்அப் உரையாடல் நடந்ததையே "ஆட்சேபகரமான குறுந்தகவல்" என சித்தரிப்பது ஏன் என்ற கேள்வியையும் சமஸ் எழுப்பியுள்ளார்.
பத்திரிகையாளர்களின் தொழில் இயல்பே பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டு தகவல் சேகரிப்பதாகும். குற்றச்சாட்டு எதிர்நோக்கும் நபர்களோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, சமூக ஆர்வலர்களோ என பலருடன் உரையாட வேண்டிய சூழல் பத்திரிகையாளர்களுக்கு இயல்பான ஒன்று. இந்த உரையாடலின் அடிப்படையிலேயே ஒரு பத்திரிகையாளரை குற்றச்சதியுடன் தொடர்புபடுத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானதாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, சட்ட விசாரணைக்கு அனைவரும் உட்பட வேண்டியது அவசியம் என்றாலும், சாட்சியாக அழைக்கப்பட்ட ஒருவரை குற்றவாளி போல நடத்தக் கூடாது என்றும், இந்த விவகாரம் ஒரு தனிநபரைப் பற்றியது மட்டுமல்ல; பத்திரிகை சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, தனிமனித கண்ணியம் மற்றும் அதிகார பொறுப்புணர்வு ஆகியவற்றையும் தொடும் முக்கியமான விவகாரம் என்றும் சமஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் இருந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.