ஆகஸ்ட் 5-ல் தமிழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்... ஆகஸ்ட் 6-ல் வேளாண் பட்ஜெட்! சபாநாயகர் அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்குகிறது. 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றப் பேரவை விதி 181(1)-ன் படி, 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை அதே நாளில் பேரவையில் தாக்கல் செய்ய ஆளுநர் தேதி நிர்ணயித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, காலை 10 மணிக்கு பேரவை கூடும் நிலையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் மாநில அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த பட்ஜெட், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையாக இருப்பதால் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் புதிய திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, வருவாய் மற்றும் செலவின திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண்மைத் துறைக்கான தனி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. விவசாயிகளின் நலன், பாசனத் திட்டங்கள், இயற்கை விவசாய ஊக்குவிப்பு, விவசாயக் கடன், பயிர் காப்பீடு, சந்தைப்படுத்தல் வசதிகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் நிதிநிலை, வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் குறித்து அனைவரின் கவனமும் இந்த கூட்டத்தொடரின் மீது திரும்பியுள்ளது.
தமிழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த கூட்டத்தொடர், மாநிலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்களுக்கான முக்கிய வழிகாட்டியாக அமையும் என அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.