"எனது மகன் ராகா".. குழந்தையை அணைத்தபடி உருக்கமான பதிவு வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்!
ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை தனது மகன் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து, "எனது மகன் ராகா" எனக் குறிப்பிட்டு, வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்பதாக மாதம்பட்டி ரங்கராஜ் உணர்ச்சிபூர்வமான பதிவு வெளியிட்டுள்ளார்.
பிரபல சமையல் கலைஞரும், தொழிலதிபரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்ட விவகாரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை தனது மகன் என்பதைக் டிஎன்ஏ பரிசோதனை உறுதி செய்ததைத் தொடர்ந்து, "எனது மகன் ராகா" என்று குறிப்பிட்டு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், தனது கேட்டரிங் சேவை மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர். திருமண விழாக்கள் மற்றும் பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கான உணவு ஏற்பாடுகள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய அவர், பின்னர் 'மெஹந்தி சர்க்கஸ்' உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையில், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2023ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தங்களது திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், கர்ப்பமாக இருந்தபோது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை விட்டு விலகிவிட்டதாகவும், பிறந்த குழந்தைக்கு தந்தை பொறுப்பை ஏற்க மறுப்பதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் தனித்தனியாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையின்போது, மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் முக்கியமான நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது. குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த சம்மதம் தெரிவித்ததுடன், பரிசோதனையில் குழந்தை தனது மகன் என்பது உறுதியானால், வாழ்நாள் முழுவதும் குழந்தையின் பராமரிப்பு மற்றும் எதிர்கால பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் விசாரணைகளின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் மகன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பல மாதங்களாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முக்கிய திருப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உணர்ச்சிபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"அனைவருக்கும் வணக்கம். எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்."
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுடன், தனது மகன் ராகாவை கைகளில் அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் அவரது முடிவை வரவேற்று குழந்தையின் எதிர்கால நலனே முக்கியம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த காலத்தில் நடந்த சர்ச்சைகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்குப் பிறகு குழந்தையை தனது மகனாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்பதாக மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குழந்தையின் நலன் மற்றும் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.