"தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்": மீஞ்சூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி திமுக அரசு மீது அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!
மீஞ்சூரில் கல்லூரி மாணவி மீது கஞ்சா போதை கும்பல் நடத்திய தாக்குதலைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பெண்களுக்கு வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பு இல்லை எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகத் தொடர்ந்து விமர்சித்து வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது மீஞ்சூரில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை முன்வைத்து திமுக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். "தமிழகத்தில் பெண்களுக்கு வீதி மட்டுமல்ல, வீடும் பாதுகாப்பற்ற இடமாக மாறிவிட்டது" என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில், கல்லூரி மாணவி ஒருவரை ஒரு கும்பல் அறிவாளால் வெட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கும்பல் கஞ்சா போதையில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. இந்த கொடூரச் செயலைச் சுட்டிக்காட்டியே அன்புமணி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதே இதுபோன்ற குற்றங்களுக்கு முக்கியக் காரணம் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியதே திமுக அரசின் மிகப்பெரிய தோல்வி என்றும், கஞ்சா கும்பல்களின் அட்டகாசத்தால் சாமானிய மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், களத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.