"சிறப்பு சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட முடியாது" – ஆணவக் கொலைகளைத் தடுக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!
ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, சட்டங்களை இயற்றுவது அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தது.
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கெனத் தனிச் சிறப்புச் சட்டம் இயற்றக் கோரித் தொடரப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று (ஏப்ரல் 16) முடித்து வைத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சிறப்புச் சட்டத்தை இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட இயலாது" என்ற முக்கியக் கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதைக் சுட்டிக்காட்டி, இதற்கெனத் தனியாக ஒரு வலுவானச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நீதிபதிகள் தரப்பில், ஒரு சட்டத்தை இயற்றுவதும் அல்லது திருத்தம் செய்வதும் அந்தந்த அரசாங்கத்தின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. இதில் சட்ட ரீதியாக நீதிமன்றம் கட்டாய உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.
சமீபகாலமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரங்கேறும் ஆணவக் கொலைகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளுக்குக் கடுமையானத் தண்டனை பெற்றுத் தரக் கோரியும் சமூக அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், ஆணவக் கொலைகளைத் தடுக்க ஏற்கனவே உள்ள சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு முந்தைய தீர்ப்புகளில் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கை முடித்து வைத்ததன் மூலம், சட்ட ரீதியானப் போராட்டங்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன.

0 Comments
No comments yet. Be the first to comment.