நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு: பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களைத் தாக்கல் செய்தார் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 33% பெண்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் நாட்டின் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான மசோதாக்களைத் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது.
மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 131-வது அரசியல் சாசன திருத்த மசோதாவையும் (பெண்கள் இடஒதுக்கீடு), 2026-ம் ஆண்டுக்கான தொகுதி மறுவரையறை மசோதாவையும் மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் 2029 மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின்படி, மக்களவையின் மொத்த இடங்களை 543-ல் இருந்து 850-ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுகள் இடம் பெற்றுள்ளன. இதில் 33 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பதன் மூலம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் வரவேற்றாலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள 'தொகுதி மறுவரையறை' அம்சத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாகத் தென் மாநிலங்களின் அரசியல் பலம் குறையும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகின்றன. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் இன்று நள்ளிரவு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.