"கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனு இருந்தா..." - தந்தை சத்யராஜின் விமர்சனத்திற்கு விஜய் வசனம் மூலம் பதிலடி கொடுத்த சிபிராஜ்!
தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நடிகர் சத்யராஜ், விஜய்யை விமர்சித்துப் பேசிய நிலையில், அவரது மகன் சிபிராஜ் விஜய்யின் புகழ்பெற்ற பஞ்ச் வசனத்தைப் பகிர்ந்து தந்தைக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகத் திரை பிரபலங்கள் பலரும் களம் இறங்கியுள்ளனர். அந்த வகையில், தி.மு.க.வுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர் சத்யராஜ், அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாகச் சாடிப் பேசினார்.
முக்கியமாக, விஜய் நடித்த 'தலைவா' பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சிக்கல்களைக் குறிப்பிட்ட சத்யராஜ், அப்போது விஜய் நடந்துகொண்ட விதத்தை மேடையில் நடித்துக் காட்டி கிண்டல் செய்தார். விஜய்யின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் சத்யராஜ் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
விஜய் வசனம் மூலம் சிபிராஜ் பதிலடி
சத்யராஜின் இந்த விமர்சனத்திற்கு அவரது மகனும், நடிகருமான சிபிராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான சிபிராஜ், விஜய் ஒரு மேடையில் பேசிய புகழ்பெற்ற வரிகளான.
"உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்"
என்கிற வரிகளைப் பதிவிட்டுள்ளார்.
தந்தை சத்யராஜ் விஜய்யை விமர்சித்த சில மணி நேரங்களிலேயே, மகன் சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக இந்தப் பதிவை வெளியிட்டிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "தன் தந்தைக்கே சிபிராஜ் பதிலடி கொடுத்துவிட்டார்" என விஜய் ரசிகர்கள் இந்தப் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.