படகுப் பயணம்... கையில் கேமரா! மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி உலா - வைரல் புகைப்படங்கள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை படகுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 24, 2026) காலை கொல்கத்தாவில் உள்ள புனிதமான ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி தனது கையில் தொழில்முறை கேமராவுடன் (Professional Camera) ஹூக்ளி நதியின் அழகையும், அதன் கரைகளையும் புகைப்படம் எடுத்தார். குறிப்பாக, வரலாற்றுச் சிறப்புமிக்க வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலம் ஆகியவற்றை மிக அருகிலிருந்து அவர் படம் பிடித்தார். இந்தப் புகைப்படங்களை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள அவர், "இந்த நதியை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது பதிவுடன் உணர்ச்சிகரமான வரிகளையும் பிரதமர் பகிர்ந்துள்ளார். அதில், "ஒவ்வொரு பெங்காலிக்கும் கங்கை நதி மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கங்கை வங்காளத்தின் ஆன்மாவில் பாய்கிறது என்று சொல்லலாம். இதன் தெய்வீக நீர் ஒரு முழு நாகரிகத்தின் காலமற்ற உணர்வை சுமந்து செல்கிறது. இன்று காலை ஹூக்ளி நதிக்கரையில் நேரத்தை செலவிட்டது, மா கங்கைக்கு நன்றி தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது," என்று பதிவிட்டுள்ளார்.
படகுப் பயணத்தின் போது, அங்கிருந்த கடின உழைப்பாளிகளான படகோட்டிகள் மற்றும் காலை நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களையும் பிரதமர் சந்தித்து உரையாடினார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்ற தனது உறுதியையும் அவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.

0 Comments
No comments yet. Be the first to comment.