அமைதியாக வீசிய அலை: தமிழக அரசியலில் தவெக-வின் விஸ்வரூபம்! விஜய்யின் வெற்றியைத் தீர்மானித்த அந்த 3 முக்கிய காரணங்கள்!
திமுக, அதிமுக என இருபெரும் திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆதிக்கத்தை உடைத்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அரசியல் வல்லுநர்களின் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, விஜய்க்குச் சாதகமாக வீசிய அந்த 'அமைதி அலை'யின் பின்னணியில் உள்ள 3 ரகசியங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தெளிவான அரசியல் நிலைப்பாடு
கட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே விஜய் தனது அரசியல் எதிரி யார் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். சீமான் உள்ளிட்ட பிற தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்து தனது நேரத்தைச் வீணடிக்காமல், ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே தனது பிரதான எதிரியாக முன்னிறுத்தினார். "ஸ்டாலின் vs விஜய்" என்ற பிம்பத்தைக் கட்டமைத்ததன் மூலம், திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒட்டுமொத்தமாகத் தன்பக்கம் ஈர்த்தார். மேலும், அதிமுகவின் கூட்டணி அழைப்புகளை நிராகரித்து, "தவெக தலைமையில் தான் கூட்டணி; விஜய்தான் முதல்வர் வேட்பாளர்" என்பதில் உறுதியாக நின்றது அக்கட்சியின் அரசியல் மதிப்பை உயர்த்தியது.
உச்ச நட்சத்திர அந்தஸ்தும் ஈர்ப்பு விசையும்
விஜய்யை ஒரு சாதாரண அரசியல்வாதியாக மாற்றாமல், ஒரு "உச்ச நட்சத்திரமாகவே" மக்கள் முன் கொண்டு சென்றது அவரது வியூகக் குழுவின் மிகப்பெரிய வெற்றி. அவர் தினமும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை, எல்லாப் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் எப்போது மக்கள் முன் தோன்றினாலும் அது ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடப்பட்டது. கரூர் சம்பவம் போன்ற சவாலான நேரங்களில் கூட, மக்கள் அவர் மீது கொண்டிருந்த அளவுகடந்த ஈர்ப்பு, அவருக்குப் பாதுகாப்பாக இருந்தது. அவரது இந்த "நட்சத்திர பிம்பம்" மக்களிடையே ஒரு மாரல் சப்போர்ட்டை உருவாக்கியது.
திராவிடக் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்தி
கடந்த அரை நூற்றாண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டு வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் மீதும் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பு, விஜய்க்குச் சாதகமாக மாறியது. ஊழல், வாரிசு அரசியல் போன்ற புகார்களுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தியை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். "இருவர் மட்டுமே மாறி மாறி ஆள வேண்டுமா?" என்ற மக்களின் குமுறலுக்கு வடிகாலாக விஜய் அமைந்தார். இந்த மாற்றத்திற்கான தேடல் தான், அமைதி அலையாக உருவெடுத்து தவெகவை அரியணையை நோக்கி நகர்த்தியுள்ளது.
கருத்துக் கணிப்புகளையும், அரசியல் மேதாவிகளின் பார்வைகளையும் கடந்து, மக்களின் அமைதி அலை இன்று விஜய்யைப் பெரிய சக்தியாக மாற்றியுள்ளது. இந்த வெற்றிப் பயணம் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

0 Comments
No comments yet. Be the first to comment.