"தோல்விக்கு நானே பொறுப்பு; மாயை சுனாமியால் பாதிப்பு" - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்!
தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஒரு கவர்ச்சிகரமான "மாயை சுனாமி" ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அவசர மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டு தேர்தல் முடிவுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் உருக்கமாகப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்விக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். "வெற்றி வரும்போது எப்படிப் பெருமைப்பட்டுக் கொண்டேனோ, அதேபோல் இந்தத் தோல்விக்கும் நானே முழுப் பொறுப்பேற்கிறேன். இதில் தவறு ஏதும் இல்லை, இதுவே தர்மம்" என்று கூறி கட்சி நிர்வாகிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
தேர்தல் முடிவுகள் குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் தேர்தலில் ஒரு புதிய கவர்ச்சிகரமான 'மாயை சுனாமி' (Tsunami of Illusion) வீசியுள்ளது. சுனாமி என்று நான் குறிப்பிடுவது சாதனனையோ அல்லது சாகசத்தையோ அல்ல; அது பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாயை சுனாமி தமிழகத்தின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று புதிய ஆட்சி மாற்றத்தை மறைமுகமாக விமர்சித்தார்.
தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, கட்சியைக் அடிமட்ட அளவில் இருந்து மீளமைக்க புதிய உத்தரவுகளை மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்:
- கள ஆய்வு குழு: தலைமைக்கழகம் சார்பில் விரைவில் ஒரு சிறப்புத் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நேரடி கள ஆய்வு நடத்தப்படும்.
- 20 நாள் கெடு: இக்குழுவினர் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டு, அடுத்த 20 நாட்களுக்குள் விரிவான அறிக்கையைத் தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அமைப்பில் அதிரடி மாற்றம்: இந்த அறிக்கையின் அடிப்படையில் திமுகவின் உட்கட்சி அமைப்பில் மிகக் கடுமையான, அதிரடியான மாற்றங்கள் செய்யப்படும் என்றும், தங்களால் உழைக்க முடியாது என நினைப்பவர்கள் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்றும் கறாராகத் தெரிவித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.