மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை" - மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அதிரடி விளக்கம்!
தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைய அரசிடம் இல்லை" என மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமைச்சரின் விரிவான விளக்கங்கள்:
சென்னை மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மின்வாரியத்தின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பேசியதாவது:
- கட்டண உயர்வு வதந்தி: தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படாது. அரசே முன்னெடுத்து மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டண அமைப்பிலேயே மின் விநியோகம் தொடரும்.
- மின்சார வாரியக் கடன்: மின்சார வாரியம் தற்போது ₹2.50 லட்சம் கோடி கடனில் தவித்து வருகிறது. எனவே, ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் அடிமட்டத்திலிருந்து சீரமைக்கும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.
- ஊழியர்கள் பற்றாக்குறை: மின்சார வாரியத்தில் மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில், தற்போது 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவி வந்தாலும், சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய ஊழியர்கள் சுழற்சி முறையில் உழைத்து வருகின்றனர். விரைவில் இந்த காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
மறைமுக டீலிங் இருக்காது; அதிரடி எச்சரிக்கை:
மின்சாரத் துறையில் டெண்டர் முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்துத் தீவிர விசாரணை நடந்து வருகிறது. "இனிமேல் எந்தவொரு புரோக்கருக்கும் (Brokers) இந்த அலுவலகத்தில் வேலை இல்லை. யாரும் துண்டுச் சீட்டில் பரிந்துரைகள் எழுதித் தந்து காரியம் சாதிக்க முடியாது. நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றிச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் நிர்மல்குமார் எச்சரித்துள்ளார்.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் தற்காலிக மின்வெட்டுப் புகார்களுக்குப் பதிலளித்த அவர், மழைநீர் வடிகால் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகளுக்காகச் சாலைகள் தோண்டப்பட்ட போது நிலத்தடி கேபிள்கள் சேதமடைந்ததே காரணம் என்றும், அவை 160-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

0 Comments
No comments yet. Be the first to comment.