ஒரே மேடையில் 42 மணமகன்களுக்கு ‘ஆப்பு’.. மணப்பெண் வராமல் மெகா திருமண மோசடி: ம.பியில் அதிர்ச்சி பின்னணி!
மத்தியப் பிரதேசத்தில் ஆதரவற்ற பெண்கள் என்று கூறி, இன்ஸ்டாகிராம் மாடல்களின் புகைப்படங்களைக் காட்டி 42 இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் சுருட்டிய கணவன், மனைவி கைது. திருமண மேடையில் மணப்பெண் வராததால் ஏமாந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சோகம்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரே மேடையில் 42 இளைஞர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றிய மெகா திருமண மோசடி கும்பல் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்தன்று மணப்பெண்கள் வராததால், 42 மணமகன்களின் குடும்பத்தாரும் உறவினர்கள் முன்னிலையில் அவமானப்பட்டு நிற்பதாகக் கண்ணீர் மல்கக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வலை விரித்த இடைத்தரகர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் (Dewas) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 42 இளைஞர்களுக்குத் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட சில இடைத்தரகர்கள், அந்த இளைஞர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.
இளைஞர்களின் மொபைல் போன்களுக்கு அழகிய பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, "இவர்கள் அனைவரும் ஆதரவற்ற பின்னணியைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டும். நீ சம்மதித்தால் உடனே திருமணம்" என்று நம்ப வைத்துள்ளனர்.
விதித்த நிபந்தனைகள்: கூட்டுத் திருமண விழா ஏற்பாட்டிற்காக மணமகன் வீட்டார் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 25,000 வரை வசூலித்துள்ளனர். மேலும், "திருமணத்தன்று மணமேடையிலேயே உங்களுக்கு வரதட்சிணை வழங்கப்படும். அதற்கு முன்னர் வீட்டில் மெஹந்தி போன்ற எந்த சடங்குகளும் செய்ய வேண்டாம், அனைத்தையும் மேடையிலேயே பார்த்துக் கொள்ளலாம்" என நிபந்தனை விதித்துள்ளனர்.
காத்திருந்த மணமகன்கள்.. ஏமாந்த குடும்பங்கள்!
திருமண நாளும் வந்தது. தங்களுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்ற குஷியில் 42 மணமகன்களும் வாடகைக்குக் கார்களை எடுத்துக் கொண்டு, தங்களது உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பெரும் பட்டாளமாகத் திருமணம் நடைபெற இருந்த தேவாஸ் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
ஆனால், காலை முதல் மாலை வரை மணமகன் தரப்பினர் மண்டபத்தில் காத்துக் கிடந்தனர். நேரம் ஓடிக்கொண்டே இருந்ததே தவிர, மணப்பெண்களோ அல்லது அவர்களை அழைத்து வருவதாகக் கூறிய இடைத்தரகர்களோ அங்கு வரவே இல்லை. அதிர்ச்சியடைந்த மணமகன்கள், இடைத்தரகர்களின் செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டபோது அவை அனைத்தும் 'சுவிட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இன்ஸ்டாகிராம் மாடல்களின் படங்கள்
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகன்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இடைத்தரகர்கள் காட்டிய பெண்களின் புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து திருடப்பட்ட பிரபல மாடல்களின் புகைப்படங்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர். அங்கு ஏமாந்த இளைஞர் ஒருவரின் சகோதரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் வீட்டில் உள்ள சடங்குகளைக் கூட செய்யவிடாமல் தடுத்துவிட்டார்கள். இப்போது ஒட்டுமொத்த உறவினர்கள் முன்னிலையிலும் நாங்கள் அசிங்கப்பட்டு, மானம் போய் நிற்கிறோம்" என வேதனையுடன் கண்ணீர் வடித்துள்ளார்.
போலீஸ் நடவடிக்கை
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் உடனடியாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த மெகா திருமண மோசடியில் முக்கியப் புள்ளிகளாகச் செயல்பட்டு வந்த முகேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கும்பலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண ஆசையில் இருந்த 42 இளைஞர்களை ஒரே நேரத்தில் ஏமாற்றிய இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.