ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படுமா? சமூக வலைத்தள வதந்திகளுக்கு மத்திய அரசு அதிரடி விளக்கம்!
ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்த பல்வேறு விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், "ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும்" என்ற ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்து, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் தவறானது மற்றும் வதந்தி என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பதிவில், ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகப் பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், வழக்கம்போல அனைத்து நாட்களிலும் பெட்ரோல் பங்க்குகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் குழுவாக இணைந்து (Car-pooling / Group Travel) பயணிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்த நிலையைக் குறிப்பிட்டு, இத்தகைய தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை நம்பிப் பீதியடைய வேண்டாம் என்றும், எரிபொருள் விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்றும் அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.