'கருப்பு' தியேட்டரில் சாமி ஆடுபவர்களுக்கு முதலுதவி கொடுங்க; வீடியோ எடுக்காதீங்க! - நடிகர் சூர்யா வேண்டுகோள்!
'கருப்பு' திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து பரவசமடைந்து சாமி ஆடுபவர்களுக்கு உரிய முதலுதவி வழங்கவும், அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்கவும் நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான 'கருப்பு' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. பல அரசியல் மற்றும் விநியோகத் தடைகளைத் தாண்டி ரிலீஸான இத்திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
மூன்று நாட்களில் ₹147 கோடி வசூல்
திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படம், வசூலிலும் புதிய சாதனை படைத்து வருகிறது. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் உலகளவில் 147 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
தியேட்டரில் சாமி ஆடும் ரசிகர்கள்!
திரைப்படத்தில் வரும் 'கருப்பசாமி' கதாபாத்திரத்தின் மாஸான காட்சிகளையும், தெய்வீக பின்னணி இசையையும் கேட்டு தியேட்டரிலேயே ரசிகர்கள் பலர் பரவசமடைந்து சாமி ஆடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கர வைரலாகி வருகின்றன.
நடிகர் சூர்யாவின் உருக்கமான வேண்டுகோள்
இந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் குறித்து நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"கருப்பு திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!."
மேலும் சாமி ஆடும் ரசிகர்கள் குறித்து பேசுகையில்,
"திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த அன்போடு வேண்டுகிறேன்."
என்று நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சூர்யா வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.