மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு பின்னடைவா? தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
மேகதாது அணை திட்ட விவகாரத்தில், கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முற்படும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த 2025 நவம்பர் 13 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. எனினும், இத்திட்டம் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே உள்ளதால் தமிழக அரசின் மனு "முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டது (Premature)" எனக் கூறி நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தற்போதைய உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தங்களது தனி அறையில் (Chamber) பரிசீலித்து, தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், திறந்த நீதிமன்றத்தில் (Open Court) இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் முக்கிய கருத்து: "ஒவ்வொரு மாநிலமும் தனக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை, அம்மாநிலத்தின் சிறந்த நலனுக்காக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்க முழு உரிமை உண்டு. இதில் மற்ற மாநிலங்கள் தலையிட முடியாது. ஆனால், அந்த நடவடிக்கையால் அண்டை மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரின் அளவு குறையும் பட்சத்தில் மட்டுமே தலையிட முடியும்."
மேலும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய நிபுணர் குழுக்கள், பிலிகுண்டுலு அளவீட்டு மையத்தில் தமிழகத்திற்குரிய நீர் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கர்நாடக அரசு இத்தீர்ப்பைப் பயன்படுத்தி அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த வாய்ப்புள்ளதால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் கவலையும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அடுத்தகட்டமாக என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.